Friday 20 September 2013

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மகாசபை

சமூக அறிவியல் புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த ஆராய்ச்சியில் வண்ணார் சாதி குறிப்பிட்டுக் கூறும்படி கவனப்படுத்தப்பட்டிருக்கவில்லை. குறைந்த மக்கள்தொகை, அரசியல் அதிகாரமின்மை, வலுவான அமைப்பின்மை போன்ற இன்றைய சூழல்களை அம்மக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களாகக் கூறலாம்  ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இருந்த சமூகப் பொருளாதார நிலைமை வண்ணார்களுக்கு இல்லை என்று கருதிய காலனியாட்சியினர் வண்ணார்களை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வகைமைக்குள் இணைக்கவில்லை. அதாவது வண்ணார்களின் சமூகப் பொருளாதார நிலைமையானது ஒடுக்கப்பட்ட வகுப்புகளை விடவும் மேலானது என்று பொருளாகும்.1 இது வண்ணார்களின் உண்மையான கடந்த காலம்தான். பிற இந்துக்கள்வகைமைக்குள் இணைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு வண்ணார்கள் இணையானவர்கள் அல்ல மாறாக, அவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமையைச் சாதிய சமூகக் கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. வண்ணார்கள் தலித்துகளைவிடவும் மேலானவர்கள் என்று கருதப்பட்ட போதிலும் அவர்கள் பின்னவர்களைப் போல் பிற இந்துக்களுக்குஅடிமைத் தொழில் செய்தனர் வெவ்வேறான வண்ணார்களுக்குள் படிநிலை தொழிற்பட்ட போதிலும் அவர்கள் செய்த / செய்துவரும் பணிகள் ஒருபடித்தானவை. அவர்கள் அனைவரும் வண்ணான்” “வண்ணாத்திஎன்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் வசிப்பிடம் வண்ணாக்குடி, துணிவெளுக்கும் இடம் வண்ணாத்திப்பாறை, வெளுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் வண்ணாக்காரம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு பொருளை ஒரு சாதியினர் பயன்படுத்தும் காரணத்தால் அப்பொருளுக்கு அச்சாதியின் பெயர் சூட்டப்பட்டது வண்ணாக் காரம் மட்டுமேயாக இருக்கக்கூடும். துணிகளில் ஏற்படும் அழுக்கை நீக்குதல், சாயமிடுதல், பெண்களின் தீட்டு உடுப்பு வெளுத்தல், இன்ப நிகழ்ச்சிகளின்போது துணிகளால் பந்தலை அலங்கரித்தல், கோயில் திருவிழாவின்போது தீப்பந்தம் தயாரித்தல், துன்ப நிகழ்ச்சிகளில் மரியாதை செய்வதற்காக மாத்து2 விரித்தல் என ஒரேவிதமான பணிகளையே அனைத்து வண்ணார்களும் செய்கின்றனர். சலவை எந்திரம், உடுப்பு தேய்ப்பான் போன்ற இயந்திரங்களின் உபயோகம் அதிகரித்தல், இன்ப நிகழ்ச்சிகளுக்கென மண்டபத்தைப் பயன்படுத்தும் போக்கு இவற்றின் விளைவால் இன்று வண்ணார்கள் ஒருசில சமூகப் பண்பாட்டுப் பணிகளை மட்டும் செய்கின்றனர். மேற் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கெனப் புறம்போக்கு நிலத்தில் அவர்கள் குடியிருப்பதற்கு நிலம், வருடத்திற்கு ஒருமுறை நெல், அன்றாடம் ஊர்ச்சோறு போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களின் சார்பு நிலை, செய்த பணி ஆகியவற்றின் காரணமாகத் தீண்டாமை, சுரண்டல், புறக்கணிப்பு, பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு உள்ளாகினர். பிறரை இழிவுபடுத்துவதற்கும்கூட வண்ணார்களைத் தொடர்புப்படுத்தி இழி சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. வயிறா வண்ணாந்தாழியா”, “வயிறா வண்ணாஞ்சாலா”, “வாடா வண்ணாஞ்சாலு”3, “அடிப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். வண்ணார்கள் செய்யும் பணிகளுக்காக வழங்கப்படும் ஊர்ச்சோறு அவர்களை இழிவுபடுத்துகிறது. வண்ணார்கள் யாருக்கெல்லாம் பணி செய்கிறார்களோ அவர்களின் வீடுகளில் அன்றாடம் இரவில் உணவு வாங்கிக் கொள்ளும் வழமைக்குப் பெயர் ஊர்ச்சோறு. அவர்களுக்குத் தேவையில்லாதிருந்த போதிலும்கூட. ஊர்ச்சோறு வாங்கவில்லை என்றால் ஆதிக்கச் சாதியினர் அது தங்களை அவமதிக்கும் செயலாகக் கருதுவர். எனவே, ஊர்ச்சோறு வழமையைச் சாதியாதிக்கத்தின் ஒரு வடிவமெனலாம். ஊர்ச்சோறு பெறுவதற்குப் பொதுவாக வண்ணார் பெண்கள் செல்வது வழமை. அப்போது அப் பெண்களின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக சாதிப் பெயரைக்கூறி அவமதிப்பது, காத்திருக்கச் செய்து மிச்ச உணவைக் கொடுப்பது, பாலியல்ரீதியாக வன்புறுத்துவது போன்ற ஒடுக்குமுறைகளை வண்ணார் பெண்கள் அனுபவித்தனர்/ அனுபவிக்கின்றனர். பல வீடுகளில் அவர்கள் சோறு எடுப்பதால் அவற்றின் அளவு அவர்களின் தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் ஆனால் அவையனைத்தையும் அவர்களால் உண்ண இயலாது. இருப்பினும் பல வீடுகளிலிருந்து சோறு எடுப்பதால் அவையனைத்தையும் வண்ணார் குடும்பங்கள் உண்ணுவதாக ஆதிக்கச் சாதியினர் கருதினரோ என்னவோ தெரியவில்லை. அதிகமாக உண்ணும் நபர்களையும் பெரிய தொந்தி உடையவர்களையும் இது வயிறா வண்ணாந்தாழியா”, “வாடா வண்ணாஞ்சாலுஎன்று ஏளனம் செய்யும் வழமை உள்ளது. இது போல கலை வடிவத்திலும் வண்ணார்கள் அவமதிக்கப்பட்டனர். இதனால் அதற்கெதிராகப் போராடினர். சாதி அரசியலில், இன்ப நிகழ்வுகளை வெகுவிமரிசையாக ஆதிக்கச் சாதியினரைப் போல் தலித்துகளும் இழிதொழில் செய்யும் சாதியினரும் கொண்டாடக் கூடாது என்பதற்காகப் பின்னவர்கள் தங்களின் சுபகாரியங்களின் போது மேளம் வாசித்தல், குதிரையில் ஊர்வலம் செல்லுதல் போன்றவை கூடாது என்ற சாதியாதிக்கச் சட்டம் இருந்தது. புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு போராட்டம் சாதியாதிக்கச் சட்டங்களை ஆதிக்கச் சாதியினர் செயல்படுத்தியதும் அதை வண்ணார்கள் புறக்கணித்ததாலும் விளைந்தது. கரூரில் மேளம் வாசிக்கும் செங்குந்தர்களுக்கு வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் இழிதொழில் செய்த போதிலும் பின்னவர்கள் இரு பிரிவினர்களையும் முன்னவர்கள் தங்களுக்கும் கீழானவர்கள் என்ற முறையில் சாதியாதிக்கச் சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக அவர்கள்மீது புறக்கணிப்பைக் கடை பிடித்தனர். அதாவது அவர்களுக்கு மேளம் வாசிக்க மறுத்தனர். இதனால் வண்ணார்களும் மருத்துவர்களும் செங்குந்தர்களுக்கு இழிதொழில் செய்வதைப் புறக்கணிக்கத் தொடங்கினர். ஆதிக்கம், சார்புநிலை உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை அப்போராட்டத்தில் இருந்தது. இதனால் செங்குந்தர்கள் அப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக வேறோர் ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். வெளுப்புத் தொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில் குடியிருப்பதிலிருந்து வண்ணார்களையும் மருத்துவர்களையும் அப்புறப்படுத்துவதற்காகச் செங்குந்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை எதிர்கொள்ளும் விதமாகவும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும் வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் முடிவுசெய்தனர். மேலும் இதர அமைப்புகளின் ஆதரவையும் திரட்டினர். அவர்கள் கரூர் மாவடியான் கோவிலில் 1932, ஜூன் 21ஆம் தேதி இரண்டாவது முறையாக சுமார் 150 பேர் கூடினர். இக்கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோரும் பங்கெடுத்தனர். கூட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடன் பத்திரிகை ஊழியர் கே. ஆர். தலம்பநாத பிள்ளை இப்போராட்டத்தைச் சமூக முன்னேற்றத்தின் அங்கமெனக் கருதி, தொழில் மறுப்புச் செய்தோருக்குத் தொழில் மறுப்புச் செய்த வண்ணார்களையும் மருத்துவர்களையும் பாரட்டியதோடு அப்போராட்டத்தைத் தொடர்வதே சரியானதெனப் பேசினார். கே. எ. பசுபதி முதலியார், மருத்துவர் கே. எம். தர்மலிங்க பண்டிதர், கே. எம். சின்னசாமி மேஸ்திரி, மருத்துவர் வி. எஸ். நடேச பண்டிதர், டி. எஸ்.பெரியண்ண பண்டிதர், கே. எம்.ராஜூ மேஸ்திரி, சின்னு மேஸ்திரி ஆகியோர் இப்போராட்டத்தைத் தொழிலாளர் போராட்டமாக இனம்கண்டு மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் வெற்றிபெறுவதையும் அதுபோல இவர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டுமென வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் சமத்துவப் பாடல்களும் பாடப்பட்டன.5 இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதா அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்பதை அறிந்துகொள்ளமுடியவில்லை. பாடல் கடந்த காலங்களில் தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இடம்பெற்றிருந்தது. இவற்றில் சாதி குறித்த பாடல்களும் உண்டு. அவ்வாறு பாடப்பட்ட பாடல்களில் ஒன்று வண்ணான் பாட்டு. வண்ணான் வந்தானே, வண்ணாத்தியும் வந்தாளே . . .என்று தொடங்கும் பாடல் மதுரையைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவரால் பாடப்பட்டது. ஒடியன் கிராமபோன் இசைத்தட்டில் பதிவுசெய்யப்பட்ட அப்பாடல் தேநீர்க் கடை, கச்சேரி, தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் ஒலிப்பரப்பப்பட்டது. அப்பாடல் வண்ணார்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை ஆதிக்கச் சாதியினருக்கு வண்ணார்கள் செய்த/செய்துவரும் பணிகள் அவர்களாகவே மனமுவந்து ஏற்றுக்மேகொண்டதல்ல மாறாகச் சாதிக் கட்டமைப்பின் விளைவு. விருப்பமின்றி செய்த பணிகளை எந்த வடிவத்திலும் யார் பிரதிபலித்தாலும் அது செய்யப்பட்டவர்களுக்கு வேண்டுமென்றால் ரசிக்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் செய்தவர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவே இருக்கும். உண்மை என்னவென்றால் வண்ணான் பாடல்ஆதிக்கச் சாதியினரால் ரசிக்கப்பட்டது வண்ணார்களால் வெறுக்கப்பட்டது. ஆங்காங்கே பொதுவெளிகளில் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டதால் வண்ணார்களிடத்தில் அதற்கெதிரான கொதிப்பு உருவானது. அப்பாடலை வண்ணார்கள் எதிர்க்கத் தொடங்கினர். போராட்டத்தின் வடிவமானது ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மூலமாக அப்பாடல் தடைசெய்யப்பட வேண்டுமென்று அரசாங்கத்திடம் முறையிடுவதில் தொடங்கி அப்பாடல் இடம்பெற்றிருந்த இசைத்தட்டை நொறுக்குவதில் முடிவடைந்தது. வண்ணார் குல மகாஜன சங்கத்தின் மூலமாக அப்பாடலுக்கு எதிரான முதல் குரல் ஒலித்தது. அச்சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் திருச்சிராப்பள்ளியில் 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நாகை குரு குமாரசாமி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் வண்ணான் பாட்டு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வண்ணார் குல மக்களை இழிவாகவும் தூஷணையாகவும் வெறுப்பு உண்டாகும்படியாகவும் பாடும்படியான பாட்டாகிய வண்ணான் வந்தானே! வண்ணாத்தியும் . . .என்ற பாட்டை ஒருவராகிலும் அல்லது பலர் கூடிய ஒரு நாடக சபையரால் நாடக மேடைகளிலும் பாடக் கூடாதெனவும் ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிஸிபாலிட்டி, யூனியன் போர்டு முதலிய சபைகளின் தலைவர்களைத் தடைசெய்யும்படி கேட்டுக்கொள்கிறது”, “அந்த விஷயத்தை ஜில்லா கலெக்டர் அவர்களிடம் தெரிவித்துக்கொள்வதற்கு நிர்வாக சபை அங்கத்தினர்களில் தோழர்கள் எம். நல்லசாமி, எம். துரைசாமி, டி.பரிமணம், தாவுத்கான், பி. சின்னமுத்து, பி. முத்துசாமி, டி. எம். சிவசுப்ரமணியம், குப்புசாமி, என். பனையடியான் முதலிய அங்கத்தினர்கள் அடங்கிய தூதுக் கூட்டம் அனுப்பி வைக்க வேண்டும்”, “கூடிய சீக்கிரம் வண்ணார்குல மாகாண மாநாடு கூட்ட வேண்டுமெனவும் அதன் மூலமாக அந்தத் தீர்மானத்தை மாகாணம் முழுவதும் பிரசாரம் செய்து பரவச் செய்ய வேண்டும்”, “இத்தீர்மானங்களை ஜில்லா கலெக்டர், திருச்சி முனிசிபல் சேர்மன், முனிஸிபல் கமிஷனர், ஜில்லா போலீஸ் சூப்பிரண்டெண்டு முதலியோருக்கும் பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு இக்கூட்டம் காரியதரிசிக்கு அதிகாரமளிக்கிறதுஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இப்போராட்டத்திற்கு ஆதரவான குரல் வண்ணார் அல்லாத சாதியினரிடமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மெட்ராஸ் மாகாணப் பேரவை உறுப்பினர்களுமான எம். தேவதாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியோர் அப்பாடலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். எம். தேவதாசன் அப்பாடலுக்கு எதிராக மனு கொடுத்தார். மெட்ராஸ் மாகாணப் பேரவையில் அப்பேரவையின் உறுப்பினரான வி. ஐ. முனிசாமி பிள்ளை அப்பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். வண்ணான் பாட்டுவண்ணார் பெண்களின் அன்றாடப் பணிகளை விமர்சிப்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு அப்பாடலில் ஒன்றுமில்லை அதற்கெதிரான நடவடிக்கை அவசியமில்லை என்று உள்ளாட்சி உறுப்பினர் முகமது உஸ்மான் பதிலளித்தார்.8 அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையிலும் கேள்வி எழுப்பியதிலும் கிடைத்த ஏமாற்றம் வண்ணார்களை அடுத்த கட்டப் போராட்டத்திற்குத் தள்ளியது. நீதிமன்றத் தலையீட்டின் மூலம் அப்பாடலைத் தடை செய்வதற்காக மாயாவரம் துணை நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இது நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்ட வழக்கல்லஎன்று நீதிபதி தீர்ப்பு கூறிவிட்டார்.9 அரசாங்கத்தின் புறக்கணிப்பின் பின்னணி சமூகப் பண்பாட்டு உள்விவகாரங்களைப் புறந்தள்ளும் காலனியாட்சியின் கொள்கையே. விளைவு அப்பாடல் பொதுக்களங்களில் ஒலிபரப்பப்பட்டபோது வன்முறை வெடித்தது. அரசாங்கத்தின் புறக்கணிப்பும் ஒருசில இடங்களில் நிகழ்ந்த வன்முறையும் அப்பாடலுக்கெதிரான போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குத் தள்ளியது. அப்பாடலுக்கு எதிரான மாநாடு நடத்துவதற்குத் தீர்மானித்த வண்ணார் மகாஜன சங்கம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திருச்சிராப்பள்ளியில் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மாநாடு என். சிவராஜ் தலைமையில் நடைபெறும் எனவும், மெட்ராஸ் மாகாண இரண்டாவது மந்திரி கனம் பி. டி. ராஜன் மாநாட்டைத் திறந்துவைக்கிறார், எ. கருப்பணன் வரவேற்பு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மாநாட்டிற்குத் தீர்மானங்கள் அனுப்புகிறவர்கள் 1934ஆம் ஆண்டு 15 ஜனவரி தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்றும், வெளியூரிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்குச் சாப்பாடும் இடவசதியும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குடும்ப சகிதமாய் வரும் பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளைக் குறித்து தெரிவிக்க வேண்டுமென்றும் அவ்வறிவிப்பில் கூறப்பட்டது. வரவேற்புக் கட்டணம், பிரதிநிதி கட்டணம் ஆகியன முறையே ரூ. 2, ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்டது. எம். துரைசாமி, டி. எம். சிவசுப்பிரமணியம் ஆகியோர் மாநாட்டின் காரியதரிசிகளாகச் செயல்பட்டனர். மாநாட்டு வேலைகளுக்காக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தனர்.10 இம்மாநாடு குறித்து புரட்சி இதழில் விளம்பரம் செய்யப்பட்டது.அறிவித்தபடி தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மகாநாடு திருச்சிராப்பள்ளி நகராட்சிப் பொது அரங்கத்தில் 1934ஆம் ஆண்டு ஜனவரி 22இல் மாலை தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி திருவாங்கூர், மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நவீன வரலாற்றில் வண்ணார்கள் முதன்முறையாகப் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாகக் கூடியது வண்ணான் பாடலுக்கெதிரான போராட்டத்தில்தான். வண்ணார்களுக்குள் பல பிரிவுகள் இருக்கும்போது இப்போராட்டம் எந்த வண்ணார்களால் நடத்தப்பட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி இதர ஒருசில பாகங்களிலிருந்தும் வண்ணார்கள் பங்கெடுத்திருப்பதால் அனைத்து வண்ணார்களும் இதில் பங்கேற்றிருக்கலாம் என்று கருதலாம். வண்ணான் பாட்டுவண்ணார்களை ஒருங்கிணைத்தது என்றால் அது மிகையான கூற்றல்ல. தலித் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தோரும் வண்ணார்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர். சென்னை அரசாங்கத்தின் மந்திரி பி.டி. ராஜன், திருநெல்வேலி சேர்மன் ரெங்கநாத முதலியார், மீனாம்பள்ளி ஜமீன்தார் கே. சி. எம். வெங்கடாஜல ரெட்டியார், பி. ரெத்தினவேலு தேவர், பி. கே. பி.ராஜா சிதம்பர ரெட்டியார், வி. மாணிக்கம் பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம், பெ. விசுவநாதம், இந்தியா இதழின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர், எம். பாலகிருஷ்ணன், டி.வி.கே. நாயுடு, “ஐக்கிய அரசுஎன்.எஸ். கோவிந்தசாமி, டி. சிவஞானம், நீலாவதி, ஆர். மருதை, பி. சிவபிச்சை, மதுரை டாக்டர் அழகிரிசாமி, முத்துசாமி, கரூர் கே. பசுபதி ஆகியோர் உட்பட சுமார் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். பி.டி. ராஜன், என். சிவராஜ் ஆகியோரைத் திருச்சிராப்பள்ளி மெயின்கார்டு கேட்டிலிருந்து (சத்திரம் பேரூந்து நிலையம்) வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைந்து வந்தனர். பி.டி. ராஜனுக்கு திருச்சி சிவசுப்பிரமணியம், சிவராஜுக்கு டாக்டர் அழகிரியும் வரவேற்பு பத்திரம் வாசித்தனர். மதுரை முத்துசாமி மாநாட்டைத் திறந்து வைக்கும்படி பி.டி. ராஜனை கேட்டுக்கொண்டார். கி. ஆ. பெ. விசுவநாதம் அதனை ஆமோதித்தார். பி. டி. ராஜன் திறப்புவிழா உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார் கே. எம். பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்தார். அப்பாடல் தொடர்பாக பி. டி. ராஜன் இவ்வாறு பேசினார்: நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் உங்கள் சமூகத்தையும் உங்கள் மனதையும் புண்படுத்தும் பாட்டைக் குறித்திருக்கிறீர்கள். இது விஷயமாக நியாயஸ்தலத்திற்கும் வழக்கு சென்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. இது விஷயமாக நான் ஒரு யோசனையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் மனதைப் புண்படுத்தும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு வேதனையாகத்தானிருக்கும். ஆகையால் நீங்கள் அதை மறந்துவிட வேண்டும். அங்ஙனம் செய்யாவிட்டால் உங்கள் எதிரிகளுக்குப் பின்னும் இடந்தருவதாகும். எனவே எதிரிகளுக்கு நற்புத்தி கற்பிக்க வேண்டி நீங்கள் பொறுமைகாட்ட வேண்டும். அங்ஙனம் செய்தால் பாட்டின் பழைய ஞாபகம் உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். எதிரிகளும் வெட்கி தங்கள் செய்கைக்கு வருந்தி விட்டுவிடுவார்கள்”.12 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள்மீது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படும் அவமானம், வன்முறை போன்றவற்றை மறக்கத்தான் நினைக்கிறார்கள் ஆனால் ஆதிக்கச் சாதியினரோ அவற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும்போது எவ்வாறு மறக்க இயலும்? வண்ணான் பாட்டு பொதுவெளியில் ஆங்காங்கு பாடப்படும்போது வண்ணார்களால் எவ்வாறு அப்பாட்டை மறக்க இயலும்? அப்பாட்டு தரும் அவமானத்தையும் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? அப்பாட்டு அழிக்கப்படும்போது மட்டுமே அது தரும் அவமானத்தையும் மறக்க இயலும். வண்ணார்களின் இப்போராட்டம் அப்பாட்டை ஒழிப்பதற்காகவே.மாநாட்டின் வரவேற்பு தலைவர் கருப்பண்ணன் தனது உரையில் அப்பாட்டு குறித்துப் பின்வருமாறு பேசினார்: “. . . வண்ணான் பாட்டுத் தொல்லையைப் பற்றியும் சற்று சிந்தித்தல் வேண்டும். இப்பாட்டால் நமது மாகாணத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது; இருக்கிறது. இக்கிளர்ச்சியால் என்ன பயன் ஏற்படுமென்பதைப் பற்றி நான் ஒன்றும் ஜோசியம் கூறப்போவதில்லை. ஆனால் நமது சமூகம் உணர்ச்சி பெற்று, உலக சமத்துவப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது இக்கிளர்ச்சியின் மூலமாகத் தெளிவாகிவிட்டது. இத்தகைய கிளர்ச்சிகளெல்லாம் வீணாகிவிடக் கூடாது என்று கருதியே இக்கிளர்ச்சியை ஒன்று கூட்டி பலமானதும் வேகமானதும் சக்தி வாய்ந்ததுமான நமது எண்ணங்களை வெளியாரறியுமாறு செய்ய முற்பட்டோம். அத்தகைய முயற்சியே தான் இன்று நீங்களும் நாமும் இங்கு சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமாகிய இம்மாநாடாக வந்து முடிந்திருக்கிறது”.13 இம்மாநாட்டின் தலைவர் என். சிவராஜ் வண்ணார் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பாக உரையாற்றியிருப்பினும் அப்பாடல் தொடர்பாகப் பேசினாரா என்பது தெரியவில்லை. மாநாடு தொடர்பான செய்திகளும் உரைகளும் இடம்பெற்றிருக்கும் ஆதாரங்களில் என். சிவராஜ் உரையிருப்பினும் அப்பாடல் குறித்த அவருடைய கருத்து எதுவும் பதிவாகியிருக்கவில்லை. அவர் அது குறித்து எதுவும் பேசியிருக்கவில்லையா? அல்லது அவரின் பாடல் குறித்த கருத்து பதிவுசெய்யப்படாமல் விடப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் நாள் (23 ஜனவரி 1934) காலை 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் பதினைந்து தீர்மானங்களில் 3, 4, 5 ஆகிய தீர்மானங்கள் வண்ணான் பாட்டுதொடர்பான தீர்மானங்களாகும். மூன்றாம் தீர்மானம் அ, ஆ என இரண்டு தீர்மானங்களைக் கொண்டது. தீர்மானம் 3. , “மதுரை தோழியர் சிவபாக்கியத்தம்மாள் ஒடியன் கிராம்போன் ரெக்கார்டின் வண்ணான் வந்தானே எனப் பாடி இருக்கும் பாட்டும் முழுவதும் நமது குலத்தினர்களுக்கே மானஹானி உண்டாகுமாறு இருப்பதோடு மேல்படி பாட்டில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு சொல்லும் நமது குலத்தையும் தொழிலையும் இழிவுபடுத்தி இடித்துக் கூறுவதாக இருப்பதால் மேற்படி ரிக்கார்டை பறிமுதல் செய்வதோடு மேற்படி பாட்டை பொதுமக்கள் அடங்கிய நாடகம், டாக்கீஸ், சங்கீதக் கச்சேரி முதலியவற்றில் ஒருவரும் பாடக் கூடாதெனத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனச் சென்னை அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது”. “இது சம்பந்தமாகத் தலைவர் என். சிவராஜ் அவர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் தூதுக் கோஷ்டியைச் சென்னை ஹோம் மெம்பர் அவர்களிடம் அனுப்புவதெனதீர்மானம் 3.ஆ நிறைவேற்றப்பட்டது.14 அப்பாடலை இனிமேல் பாடாதிருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்க வேண்டுமென்று கூறிய அதே சமயம் இதுகாலம் பாடியதற்காக அப்பாட்டைக் கொடுத்த மிஸ் சிவ பாக்கியத்தம்மாள் பேரிலும், வெளியிட்டுள்ள ஒடியன் கம்பெனியார் மீதும் மானநஷ்ட வழக்குத் தொடர வேண்டுமென்றுநான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்காவது தீர்மானம் நிறைவேறிய பின்னர் சிவபாக்கியத்தம்மாள் பாடிய வண்ணான் வந்தானேபாடல் ஒலி பரப்பப்பட்டது. பாடலின் வரிகள் கனன்று கொண்டிருந்த வண்ணார்களின் கொதிப்பை அதிகரிக்கவே அவர்கள் வண்ணான் வந்தானேபாடல் இசைத் தட்டை நொறுக்கித் தீக்கிரையாக்கினர். அப்போது அங்குக் குழுமியிருந்த பங்கேற்பாளர்கள் அதைக் கைத்தட்டி ஆதரித்தனர். அதன் பின்னர், “சலவைத் தொழிலாளர்களிடத்தில் அனுதாபமுள்ள பொது ஜனங்களிடத்தில் வண்ணான் வண்ணாத்தி பிளேட்டுகள் இருக்குமானால் அவற்றைத் தீ வைத்துக் கொளுத்துமாறு” 5ஆம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.15 பின்னர் மேலும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு பகல் 12 மணிக்கு நிறைவுற்றது. இந்த மாநாட்டிற்குப் பின்னர் சென்னையில் 1934 மார்ச் 27 அன்று நடைபெற்ற சலவைத் தொழிலாளர்களின் கூட்டம் எஸ். குஞ்சிதம் அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை நகரம் முழுவதிலுமுள்ள சலவைத் தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்திலும், வண்ணான் வந்தானே பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அப்பாடல் இசைத்தட்டு பறிமுதல்செய்யப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.16 இதற்குப் பின்னர் அப்பாடலுக்கு எதிரான கூட்டம் வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எனவே அந்த பாடல் அதன் பின்னர் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று நம்புவோம்.


 

1 comments:

  1. வண்ணான் சாதியை பற்றிய கடந்த கால நினைவுகளை மறக்க செய்து, புது சிந்தனைகளை பொதுமக்கள் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும். இதற்கு செய்ய வேண்டிய காரியங்கள்
    1) குலத் தொழில் முறை அழிக்கப்பட வேண்டும்.
    2) குலத் தொழில் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளோர் இத் தொழிலை வியாபார அடிப்படையில் நடத்திட வேண்டும்
    3) நமது சாதி இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்கள் கற்று பல்வேறு அரசு மற்றும் தனியார் துறையில் உயர் பதவிகளை வகிக்க வேண்டும்
    4) வண்ணார் மூலம் நடத்தப்படும் வண்ணார் தொழில் மையங்கள், அலுவலகங்களில் வண்ணார்க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
    5) உயர் சாதியினர் நம்மை சார்ந்து வாழும் வகையிலான பெரு/ சிறு தொழில்களை தொடங்க வேண்டும் ( உணவகம், ஜவுளிகடை, தையல், அழகு சாதன பொருட்கள் விற்பனை, கட்டடம் கட்டுதல் போன்றவை)
    6) நம் சாதி பெண்கள் தன்மானத்துடன் வாழ விழிப்புணர்வு அளிக்க வேண்டும். மேலும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்

    ReplyDelete